Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாய் மண்ணுக்கு திரும்புவோம் :காஷ்மீர் பண்டிட்டுகள் மகிழ்ச்சி

ஆகஸ்டு 06, 2019 03:32

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு, பண்டிட் சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் பூர்விக குடிகளான, பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்கள், அங்கு, ஏராளமான எண்ணிக்கையில் வசித்து வந்தனர். காஷ்மீரில், பயங்கரவாதம் தலைதுாக்கிய பின், அவர்கள், அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். தற்போது அவர்கள், டில்லி உள்ளிட்ட பல இடங்களில், அகதிகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் நடவடிக்கை, எங்கள் வாழ்வில், புது வெளிச்சம் பாய்ச்சி உள்ளது. ஆக., 5ம் தேதி, எங்கள் வாழ்வில் மிக முக்கியமான நாள். சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ள நாள்.ஷ்யமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபத்யாய, வாஜ்பாய் போன்ற தலைவர்களின் லட்சியம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்களின் கலாசாரம், அடையாளம் ஆகியவை பாதுகாக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நாங்கள், விரைவில் தாய் மண்ணுக்கு திரும்புவோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஜம்முவில், கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகள் அமலில் உள்ள போதும், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அறிந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியில் வந்து, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும், மேளதாளங்களை இசைத்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை வாழ்த்தி, கோஷங்களை எழுப்பினர்.

தலைப்புச்செய்திகள்